Udhaisri Kavidhaigal

Monday, March 4, 2019

த000048 -ஒரு முறையேனும் உன்னை நீ பார் -உதய்ஸ்ரீ

ஒரு முறையேனும் உன்னை நீ பார் 

கவிதை ; உதய்ஸ்ரீ
அ :
அன்பாய் பேசி பழகிடு
அனைவருக்கு ஆறுதலாய் இருந்திடு
அரக்கனையும்  அன்பால் வென்றிடு
அறிவால் உலகை காத்திடு
அரவாணிகளையும் உன்னுள் இணைத்திடு
அடைக்கலமாய் நீயும் இருந்திடு
அடியவர்களுக்கு நீ  உதவி வந்தால்
அண்டங்களும் உன்னை வணங்கிடுமே

இ :
இயற்க்கையோடு ஒன்றி வாழநினை
இயற்கையை அழிக்க நினையாதே
இயன்றவரை போராடு
இமையம் வரை உயர்ந்திடுவாய்
இட்டதை எல்லாம் இழந்துவிட்டு
இல்லாததை தேடி ஓடாதே
இம்மை மறுமையை எண்ணி எண்ணி
இன்றைய வாழ்வை இழக்காதே
நன்றி
உதய்ஸ்ரீ

Saturday, February 2, 2019

த000047-சுகமான தருணங்கள் கவிதை :- உதய்ஸ்ரீ

                                   சுகமான தருணங்கள் 
கவிதை :- உதய்ஸ்ரீ

அவள் நினைவை நான் சுமக்கும்  ஒவ்வொரு தருணங்களும் சுகமானவையே ...
பரந்த மணல் பரப்பில் சுடுமணலில் பட்ட கால்கள் பொறிந்தாலும் விலகாத மனதுடனே அவளோடு கைகோர்த்து, உடைந்த செதில்களாய் அங்கும் இங்கும் தன் உடல் பாகங்களை உதிர்த்து அரைஉடளோடே காட்சி தரும் பழைய படகின் ஓர விளிம்பில் எங்கள் இருவரின் முதுகு தண்டையும் அதில் சாய்த்தே பேசிய  கதைகளை மீண்டும் மீண்டும் பேசி நேரம் ஏன் நகர்கிறதோ என்றெண்ணும் மனதோடு அவள் விரல்கள் என்னோடு இணைந்து எனை கடந்து  சென்ற அத் தருணம் சுகமான தருணங்களே ....

அவள் மடிதனில் இளைப்பாறி, அவள் விரல்  கொண்டே என்தலை கோதி என் உடலை தீமூட்டிய அத்தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சுகமான தருணங்களே,

மனம் ஆயிரம் பேசியும் வெளிவரும் ஒன்றிரண்டு வார்த்தையும் உடைபட்டு அவள் விரல்  முகர்ந்து எச்சில் பதித்த அத்தருணம்  நினைக்கும் போதெல்லாம் சுகமானதருணங்களே ,

முந்தைய கடந்து சென்ற கதையெல்லாம் பேசி பேசி அவள் சிரிக்க நான் ரசிக்க வரும் சுண்டல் தான் தவிர்த்து அவள் அசந்த நொடிப்பொழுதில் நான் தந்த முத்தம்தனை இரவெல்லாம் எண்ணி எண்ணி கண்விழித்த அத்தருணம் என்றும் சுகமானதருணங்களே ,

வெட்ட வெளியும் தனி அறையாய் காட்சிதந்து கண் மறைக்க, இருள் சூழ்ந்த நொடியென்றே எண்ணினான் செல்லமாய் கடித்து சிவந்த இடையில், முத்தாய் வேர்த்தொழுகும் வேர்வைதனை நான் துடைத்த அத்தருணம் எண்ணும்போதெல்லாம் சுகமான தருணங்களே,

கூடடைந்த கோழிக்குஞ்சி தாய்தந்த இறைதனை உண்ணாது தரை கொத்தி தரை கொத்தி அண்ணாந்து தாய்முகம்பார்த்தே ஓடி ஆடி சண்டையிட்டு தன் உடன் பிறந்த குஞ்சிகளோடே விளையாடி கழித்தாலும் தாயின் குரல் கேட்டு தாயின்  இடைபுகுந்து சூட்டை சுவாசித்து தன் முகம்புதைத்து மடி தூங்கும் குஞ்சிபோல் உன் சுவாசத்தில் நான் தூங்கும் நாள் என்றோ என்று  எண்ணி எண்ணியே காத்திருக்கும் இத்தருணம் என்றும் எனக்கு சுகமான தருணங்களே.
நன்றி
உதய்ஸ்ரீ  

Friday, February 1, 2019

த000046 - படுத்துறங்க - உதய்ஸ்ரீ

2.3 பின்
கவிதை :- உதய்ஸ்ரீ
                                                        படுத்துறங்க  

உன் இதழ் மொட்டில் படுத்துறங்க ஆசை கொண்டதேனோ என்மனம் ,
புரியவில்லை ..ஏனோ புரியவில்லை ...
மாயம் என்ன செய்தாய் நான் மயங்கும் நிலைகொள்ள ,
சிந்திக்கும் செயல் பெற்றும், செயலிழந்து நிற்கின்றேன் .

வண்ணத்தை தந்த நீ தூரிகையை தர மறந்தாயோ
எண்ணத்தை தந்த நீ எழுத்தை தர மறந்தாயோ
தலையணையை தந்த நீ என் தூக்கத்தை தர மறைந்தாயோ
மழை காலத்தில் பூத்த காளான்போல் மழை முடித்ததும் மறைவாய்யா,
இல்லை எதிர்காலம் வரைவருவாயோ,
மவுனத்தை மட்டும் உதிர்த்து விட்டு மாயமென மறைத்தாய் எங்கோ நீ .....

சல சலக்கும் ஓடையில் சருகுகள் மிதப்பது போல் உயிரற்று மிதக்குகிறேன் ,
நற்காரியங்களைச்செய்யும்  மறவகுலத்து தேவனே
ஊற்று  நீரில் உயிர்காக்கும் மூலிகையை இம் மறவச்சியின் மனம்காக்க தருவாயோ இல்லை
கருவை கருவறுக்கும் கள்ளிச்செடியை தருவாயோ,
எவைத்தந்தாலும் உயிர்பெற்றுக்கொள்ளும் ஊமத்தம் செடிபோல உன்வழிதனை நான் சுமப்பேன்.
நன்றி 
உதய்ஸ்ரீ 

Tuesday, January 29, 2019

த000045-ஓ ! நடிகனே நீ வணங்க மறந்த தெய்வம் - உதய்ஸ்ரீ

                                     ஓ ! நடிகனே நீ வணங்க மறந்த தெய்வம் 

கவிதை : உதய்ஸ்ரீ 
29 / 01/2019


உற்றார் உறவினரோ
 உன் பணப்பையை உற்றுப்பார்க்க
பெற்ற தாயும் இறுதிவரை தன்னை காப்பான் என்றே
உணவை உனக்கூட்ட ,
பெற்ற பிள்ளையோ இவன் என்ன தந்தை
என்று எதிர் கேள்வி கேட்க ,
கட்டிய மனைவியோ ஒய்யாரமாய் பஞ்சுமெத்தை
தருவான் என்றே உனைத்தொடர

உன் ரசிகன் மட்டுமே நீ கை அசைத்தாள் மட்டும் போதும்மென்று இரவெல்லாம் கண்விழித்து ,
தன் வீட்டு குழந்தைக்கு வைத்திருந்த ஒரு படி பாலையும் மிச்சம் வைக்காது ,
அரை வயற்று கஞ்சியையும் உண்ணாது,
மணைக்கல்லில் தூங்கும் தன் தாயையும் பொருட்படுத்தாது,
கூட்டத்தில் சிக்கி, திக்குமுக்காடி , உன் கட்டவுட்டுக்கு
பாலபிஷேகம் செய்தே பித்தனென திரிவான்
உன்னை சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டே

நன்றி 
உதய்ஸ்ரீ